Thursday 2 January 2014

என் கண்ணான கண்ணன் !



பேரானந்தத்தைத் தந்தருளும் பேரழகன் !
பேதைக்குப் பகலவன் போன்றவன் !

பெருவிழியால் புவிதனை மயக்கும் பார்த்திபன்  !
பெதும்பை அன்றாடம் துதிக்கும் பாற்கடல் வேந்தன் !

மகுடத்தில் மயிற்பீலி சூடி நிற்கும் மதுசூதனன் !
மங்கையின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் !

மலர்மாலை சூடி விளையாடும் முரளி மனோகரன் !
மடந்தைக்கு மகிழ்வை அள்ளித்  தரும் முகுந்தன் !

அர்ஜுனன்னுக்குக் கீதோபதேசம் செய்த அச்யுதன் !
அரிவைக்குக் கீதையாய் விளங்கும் அனந்தன் !

தென்றலாய்ப்  புல்லாங்குழலூதும் துவாரகதீசன்  !
தெரிவையின் பார்வையில் தங்கிடும் துவாபரநாதன் !

பேரதிசயங்கள் பல நிகழ்த்தும் பரந்தாமன் !
பேரிளம் பெண்ணின் பூஜைக்குரிய பகவான் !

புவியெங்கும் நிறைந்து நிற்கும் புருஷோத்தமன் !
பூவையின் துணையாய் விளங்கும் புவன சுந்தரன் !

கோவர்த்தன மலையைத் தூக்கிய கோபாலன் !
கோதையின் உள்ளம் கவர்ந்த கோவிந்தன் !

காளியனின் சிரசில் நர்த்தனம் ஆடிய கண்ணன் !
காரிகையின் சலங்கையில் குடிகொண்ட கணியன் !

வெண்ணையைத் திருடும் வேங்குழல் பாலன் !
வெகுளிப்பெண்ணின் வேதனை தீர்க்கும் வேடன் !

ஹரியின் அவதாரமாய்த் தோன்றிய ஹரிகிருஷ்ணன் !
ஹ்ருதயங்களில் நிலைத்து நிற்கும் ஹ்ருஷிகேசன் !

குழலூதி உலகை மயங்கச் செய்யும் குருவாயூரப்பன் !
குழந்தைக்கு உலகநீதியைப் போதித்த குருவானவன் !

ஜகத்தினில் தர்மத்தை நிலைநாட்டும் ஜகன்னிவாசன் !  
ஜனனியின் தலைவனாய்த் திகழும் ஜனார்தனன் !

சங்குச் சக்கரம் ஏந்திய நவநீத கிருஷ்ணன் !
சகியின் துயர் துடைக்கும்  நந்தகோபன் !

கர்வம் கொண்ட அசுரரை வதைத்த கேசிநிஷூதனன்  !
கன்னியின் கருவிழியாய்க் காட்சியளிக்கும் கேசவன் !
   
யசோதையின் பிள்ளையாய் வளர்ந்த யாதவன் !
யமுனா தீரத்து மனங்களின் யோகேஸ்வரன் !

வார்த்தைகளால் ஜாலம் செய்யும் வார்ஷ்ணேயன் !
வாழ்வின் ரகசியத்தைப் போதித்த வாசுதேவன் !

என் சர்வமுமாய் விளங்கும் சர்வேஸ்வரனே !
என்னை சமர்ப்பிக்கிறேன் உன் சரணங்களிலே !


- அரங்க ஸ்ரீஜா 

No comments:

Post a Comment

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...