Monday 27 January 2014

கண்ணன் என் காதலன் !!!


கண்முன் நின்றாய் - என்
கரம் பட மறைந்தாய் 

மண்ணை அளந்தாய் - என்
மனதைக் கவர்ந்தாய் 

இன்முகச் சிரிப்பால் - என்
இதயம் நிறைந்தாய் 

செந்தேன் மொழியால் - என்
செவியை நனைத்தாய் 

குழலூதி ஆநிரை மேய்த்தாய்- உன்
எழில் கொண்டு என்னை வென்றாய் 

பிஞ்சுப் பாதங்கள்அதில்
கொஞ்சும் சலங்கைகள் 
தாமரை விழிகள் - அதில்
ததும்பும் லீலைகள் 


உன் குழலிசையே என் விருந்து 
ஏன் பிரிகின்றாய் என்னிலிருந்து !
உன் வார்த்தைகளே என் வேதம் 
ஏன் காட்டுகின்றாய் என்மேல் கோபம் !

கார்முகில் வண்ணன் உன்னை 
கரம்பற்ற நினைத்தேன் நங்கை 
சூடிக்கொண்டாய் மெல்லிய மயிலிறகை  
சுந்தரனையடைய விரித்தேன் என் சிறகை 

உன் சிணுங்கலில் சிதைகிறேன் 
உன் சிந்தையில் மிதக்கிறேன் 
உன் பார்வையில் பசி மறந்தேன் 
உன் ஆடலில் எனை இழந்தேன் 

மோகம் கொண்ட மனம்
மோதி அலைகிறது தினம்
காதல் கொண்டது உள்ளம்
கண்ணில் பெருகுது வெள்ளம்

காற்றில் வரும் உன் ஓசை - அதைக்
கட்டித் தழுவிட ஆசை
மனம் கமழும் உன் பூமாலை
மார்போடு சூடுவேன் நாளை

விரல்கள் தீண்டிட - நான்
விழைந்தேன் நாணிட 
அணைக்கும் அழகிய கரம்
அதைப் பார்ப்பதற்கே சுகம்

கண்கவர் அழகில் மயங்கினேன் மங்கை 
கயவனே ! நீ வீரத்தில் வேங்கை 
செவ்விதழ் கொண்டு வருடினாய் என்னை 
செருக்கழிந்து சரணடைந்தேன் உன்னை 


அரங்க ஸ்ரீஜா 

Saturday 11 January 2014

மழை !!!



மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்
மான்விழியாள் மனதை மாயக்கியதே !
என் தனிமையைப் போக்க வந்தாயோ !
உன் தண்மையை உணர்த்த விழுந்தாயோ !

விண்ணில் இருந்து நீ விழும் அழகில்
விம்மினேன் நான் வியப்பில் !
விருட்சம் வளர வருகின்றாயோ !
என் விரகத்தி போக்கப் பொழிகின்றாயோ !

மழைக்கால மேகம் ஊர்வலம் போகுதே !
விழைகிறதே மனம் உடன் செல்லவே !
உன் தீண்டலில் திகைத்தேன் !
என் துன்பங்களைத் தொலைத்தேன் !

விழும் துளிகளில் நனைவதற்கு !
விடுமுறை அளித்தேன் குடைகளுக்கு !
மின்னலும் இடியும் நண்பர்கள் உனக்கு !
மின்மினி போல் தெரிகிறாய் எனக்கு !

அடிக்கும் சாரலின் ஆனந்தத்தில் !
அடியவள் உருகினேன் அகத்தில் !
உல்லாச தூரலின்  மணத்தில் !
உற்சாகம் பெருகியது மனதில் !

தங்கம் போல் மின்னுகிறாய் !
எங்கும் செழிப்பைத் தருகிறாய் !
மண்வாசம் தந்து மனம் நிறைந்தாய் !
என்வாசல் வந்து விலகி நின்றாய் !

சில்லென்ற மழைத் துளியே !
என் சிந்தையில் நின்றாயே !
கரங்களில் பட்டு சிதருகிராயே !
கருவிழி சிவக்கச் செய்கின்றாயே ! 

பொழியும் பொது பேரானந்தம் தருகின்றாய் !
விழியில் விழுந்து வியப்பை அளிக்கின்றாய் !
தரணிதனில் தண்மை காக்கின்றாய் !
தரிசனம் தந்து உடன் மறைகின்றாய் !

தொட்டு விளையாடுகிறாய் என்னை !
கட்டித் தழுவுகிறாய் மண்ணை !
விட்டுப் பிரிந்தாய் என்னை !
எட்டிப் பிடிப்பேன் உன்னை !

 - அரங்க ஸ்ரீஜா 

Thursday 9 January 2014

கிராமம்...


பரவும் பகலவனின் கதிர் !
பசுமைப் பயிர்களின் உயிர் !

நிலத்தை உழும் ஏர் !
நிலதேவியின் தேர் !

வானுயர வளர்ந்த மரங்கள் !
வானுலகம் செல்லும் வழிகள் !

ஆநிரைகளின் கூட்டம் !
ஆண்டவனின் தோட்டம் !

உணவளிக்கும் உழவர் !
உலகத்தின் முதல்வர் !

ஊருக்கு ஓர் ஊருணி !
நீர் தரும் பேரணி !

அழகிய ஊற்றாய் அருவி !
அழகு சேர்க்கும் கருவி !

படர்ந்த வயல்வெளி !
பசுமைப் புல்வெளி !

வீரம் கொண்ட மாந்தர் !
வீரர்களில் வேந்தர் !

மனம் வீசும் தோட்டம் !
மனங்கவர் பூக்கள் கூட்டம் !

மழை தரும் மேகம் !
மயில்களின் மோகம் !

குயில் பாடும் பாட்டு !
குழந்தைக்குத் தாலாட்டு !

வாசலின் கோலங்கள் !
வர்மரின் ஓவியங்கள் !

ஊர்கோலத் திருவிழா !
ஊர்மக்களின் பெருவிழா !

வேற்றுமையில் ஒருமை !
ஒற்றுமையின் வலிமை !

 எங்கு நோக்கிலும் இனிமையான காட்சி !
இங்கு நடப்பதோ இயற்கையின் ஆட்சி !

எங்கு தேடினாலும் கிடைக்காத ஆனந்தம் !
இங்கு வாழ்ந்திட செய்திட்டேன் புண்ணியம் !


அரங்க ஸ்ரீஜா

Friday 3 January 2014

இறைவன் !!!




அன்போடும் பண்போடும் என்னை வளர்க்கும் அன்னை நீ !

அறிவோடும் தெளிவோடும் என்னை ஆளாக்கிய தந்தை நீ !

கலைகளைத் தெளிவுறக் கற்பிக்கும் என் குருநாதன் நீ !

கற்காத கலைகளிலும் என்னை தேர்ச்சியடைய வைத்தவன் நீ !

அச்சம்  கொள்ளுகையில் தைரியம் தரும் அண்ணன் நீ !

அச்சுறுத்தும் இடையூரிலிருந்து என்னை மீட்கும் மன்னன் நீ !

சங்கடங்களில் உடன் துணை நிற்கும் சகோதரன் நீ !

சந்தோஷங்களை அள்ளித் தரும் என் சொந்தமும் நீ !

நாட்டியத்தில் என் சலங்கை ஒலியாய் இருப்பதும் நீ !

பாட்டில் என் தாளமும் ராகமுமாய்த் திகழ்வதும் நீ !

காணும் திசையெல்லாம் தோன்றும் கடவுள் நீ !

காரிகையின் மனம் கவர்ந்த கயவனும் நீ !

நெருக்கடியில் நல்வழி காட்டும் நண்பன் நீ !

நெருங்கி வந்தால் விலகி ஓடும் மாயவன் நீ !

வீணை மீட்டுகையில் விரலில் நடமாடுபவன் நீ !

வினைப் பயனிலிருந்து மீட்கும் விமோச்சணன் நீ !

சித்திரத்தில் என் கரம் தீட்டும் உருவம் நீ !

சிந்தையில் என்றும் குடிகொண்ட தர்மம் நீ !

வாழ்க்கைப் பாதையை உணர்த்திய வழிகாட்டி நீ !

வாழ்த்துகளை வாரி வழங்கிய என் வள்ளல் நீ !


அன்னையின் உள்ளம் நீ !

ஆன்மாவின் உயிரும் நீ !

சிற்பியின் உளியும் நீ !

சிறுபிள்ளையின் சிரிப்பும் நீ !

கொஞ்சும் சலங்கையும் நீ !

பிஞ்சுக் குழந்தையும் நீ !

கண்ணின் கருவிழி நீ !

கன்னியின் கருத்தும் நீ !

விண்ணின் சந்திரன் நீ !

மண்ணின் மன்னவன் நீ !

என் எல்லாமும் நீ !

என் எல்லையும் நீ !

உணர்ந்தேன் உன்னை !

அர்ப்பணித்தேன் என்னை !


 - அரங்க ஸ்ரீஜா 

Thursday 2 January 2014

என் கண்ணான கண்ணன் !



பேரானந்தத்தைத் தந்தருளும் பேரழகன் !
பேதைக்குப் பகலவன் போன்றவன் !

பெருவிழியால் புவிதனை மயக்கும் பார்த்திபன்  !
பெதும்பை அன்றாடம் துதிக்கும் பாற்கடல் வேந்தன் !

மகுடத்தில் மயிற்பீலி சூடி நிற்கும் மதுசூதனன் !
மங்கையின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் !

மலர்மாலை சூடி விளையாடும் முரளி மனோகரன் !
மடந்தைக்கு மகிழ்வை அள்ளித்  தரும் முகுந்தன் !

அர்ஜுனன்னுக்குக் கீதோபதேசம் செய்த அச்யுதன் !
அரிவைக்குக் கீதையாய் விளங்கும் அனந்தன் !

தென்றலாய்ப்  புல்லாங்குழலூதும் துவாரகதீசன்  !
தெரிவையின் பார்வையில் தங்கிடும் துவாபரநாதன் !

பேரதிசயங்கள் பல நிகழ்த்தும் பரந்தாமன் !
பேரிளம் பெண்ணின் பூஜைக்குரிய பகவான் !

புவியெங்கும் நிறைந்து நிற்கும் புருஷோத்தமன் !
பூவையின் துணையாய் விளங்கும் புவன சுந்தரன் !

கோவர்த்தன மலையைத் தூக்கிய கோபாலன் !
கோதையின் உள்ளம் கவர்ந்த கோவிந்தன் !

காளியனின் சிரசில் நர்த்தனம் ஆடிய கண்ணன் !
காரிகையின் சலங்கையில் குடிகொண்ட கணியன் !

வெண்ணையைத் திருடும் வேங்குழல் பாலன் !
வெகுளிப்பெண்ணின் வேதனை தீர்க்கும் வேடன் !

ஹரியின் அவதாரமாய்த் தோன்றிய ஹரிகிருஷ்ணன் !
ஹ்ருதயங்களில் நிலைத்து நிற்கும் ஹ்ருஷிகேசன் !

குழலூதி உலகை மயங்கச் செய்யும் குருவாயூரப்பன் !
குழந்தைக்கு உலகநீதியைப் போதித்த குருவானவன் !

ஜகத்தினில் தர்மத்தை நிலைநாட்டும் ஜகன்னிவாசன் !  
ஜனனியின் தலைவனாய்த் திகழும் ஜனார்தனன் !

சங்குச் சக்கரம் ஏந்திய நவநீத கிருஷ்ணன் !
சகியின் துயர் துடைக்கும்  நந்தகோபன் !

கர்வம் கொண்ட அசுரரை வதைத்த கேசிநிஷூதனன்  !
கன்னியின் கருவிழியாய்க் காட்சியளிக்கும் கேசவன் !
   
யசோதையின் பிள்ளையாய் வளர்ந்த யாதவன் !
யமுனா தீரத்து மனங்களின் யோகேஸ்வரன் !

வார்த்தைகளால் ஜாலம் செய்யும் வார்ஷ்ணேயன் !
வாழ்வின் ரகசியத்தைப் போதித்த வாசுதேவன் !

என் சர்வமுமாய் விளங்கும் சர்வேஸ்வரனே !
என்னை சமர்ப்பிக்கிறேன் உன் சரணங்களிலே !


- அரங்க ஸ்ரீஜா 

Wednesday 1 January 2014

என் காவியத் தலைவன் !!



பரணி  போற்றும் நாயகனே !
புரவி  ஏறி வருபவனே !
புதுக்  கவிதை  வடிக்கின்றேன்
புவன  சுந்தரனை  அடையவே !

எங்கு  இருக்கிறாய் ?  - ஏன்
ஏங்க  வைக்கிறாய் ?
காண  விழைகிறேன்  –ஏன்
கலங்கச்  செய்கிறாய் ?

அறியேன்  உன்  தோற்றம்
அறிய  விரும்புதே  நெஞ்சம்
மலர்  முகம்  காணாமலே
மனம்  நிறைந்தாய்  கண்ணாளனே !

தரிசனம்  அளிக்க  மாட்டாயா  ?
கரிசனம்  பார்க்க  மாட்டாயா ?
உன்னைச்  சேரத்  துடிக்கின்றேன்
என்னை  ஏற்க  மாட்டாயா ?

ஏங்கித்  தவிக்கிறதே  மனம்
உன்னைக்  காண  வேண்டுதே  தினம்
காத்து  நிற்கிறேன்  உனக்காக
காதல்  நிறைந்த விழிகள்  சிவக்க 

கனவில்  காண்கிறேன்  உன்னை
கண்டதும்  மறக்கிறேன்  என்னை
முகிலாய்  தோன்றினாய்  விண்ணோடு
கவிதையாய்  மாறினாய்  கையோடு


நினைவுகளில்  நடமாடும்   உன்னை
நேரில்  காணவிழைகிறேன்  நங்கை 
மனம்  வென்ற  மணவாளனே !
முகம்  காண  மனம்  ஏங்குதே !

உன்  வருகைக்காகக்  காத்திருப்பேன்
மான்விழி  சிவக்கப்  பூத்திருப்பேன்
மாலை  சூட  வருவாயா  ?
மனதை  எடுத்துச்  செல்வாயா ?

உன்  உள்ளம்  நிறைவேனா ?
இல்லை  விண்ணை  அடைவேனா ?        
விடைகள்  அறியாமலே
விழிகள்  கலங்கிடுதே !

- அரங்க ஸ்ரீஜா 

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...